Close
மார்ச் 7, 2026 3:09 மணி

நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!

கோப்பு படம்

நாமக்கல்:

நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் புகழேந்திரன், இவரது மனைவி கோமதி (49), அவர்களது மகள் பவித்ரா (26). இவர், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தாய் மகள் இருவரும், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பஸ்ஸில் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வரும்போது, முசிறியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் இருந்து ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு, நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் வளையப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பஸ் ஸ்டாப்பில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அவர்கள் தண்ணீர் எடுப்பதற்குள், கோமதி, பவித்ரா இருவர் கழுத்தில் அணிந்திருந்த, மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு, மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் காரில் ஏறிச் சென்று தப்பிவிட்டனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த இவரும், சத்தம் போட்டனர். ஆனால், அதற்குள் மர்ம நபர்களின் கார் வேகமாகச் சென்று மறைந்தது. இது குறித்து, மோகனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top