நாமக்கல்:
வருகிற சட்டசபை தேர்தலில், வெற்றிபெற்று தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நிச்சயம் பொறுப்பேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார்.
தமிழக வெற்றிகழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:
விக்கிரவாண்டி மாநாட்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் வருகை தந்தீர்கள்,. அடுத்த மாதம் மதுரையில் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதற்கு நீங்கள் மேலும் திரளாக வருகை தர வேண்டும். நமது கட்சியில் யாரெல்லாம் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் பதவி வழங்கப்பட்டு உள்ளது. யாராவது புதிதாக வந்து கட்சியில் சேருவார்கள். அவர்களுக்கு பதவி கொடுத்தால், இந்த பதவி சரிவராது என்று சொல்லி திரும்பி சென்று விடுவார்கள். எனவே 32 ஆண்டுகளாக உழைத்து கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டு உள்ளது. நமது கழகத்தில் இருந்து உண்மை தொண்டர்கள் யாரும் மாற்றுகட்சிக்கு செல்வது இல்லை.
நமது தலைவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். தனக்கு உச்சத்தை கொடுத்த மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். நிச்சயம் 2026-ல் முதலமைச்சராக பதவி ஏற்பார். நமது ஆட்சியில் ஊழல் என்கிற வார்த்தைக்கு இடம் இல்லை. நீங்கள் பொதுகூட்டம், ஊர்வலம் நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். 234 தொகுதிகளிலும் தலைவரே வேட்பாளராக போட்டியிடுவதாக நினைத்து பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். நமது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. நம்முடைய இலக்கு 2 கோடி ஆகும். இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் சேர்த்து விடுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆராய்ந்து, தலைவர் அனுமதியுடன் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.




