நாமக்கல்:
நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான இபிஎஸ், திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, சேலத்தில் இருந்து கார் மூலம் நாமக்கல் வழியாக திருச்சி சென்றார்.
நாமக்கல் – திருச்சி மெயின்ரோட்டில் வளையப்பட்டி அருகே சிப்காட் எதிர்ப்பு குழுவினர் மற்றும் விவசாயிகள் அவரை சந்தித்து, அவருக்கு தென்னங்கன்று வழங்கி வரவேற்றனர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், நாமக்கல் மாவட்டத்தில் வலையப்பட்டி என்.புதுப்பட்டி, அரூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவதை ரத்து செய்வதற்காக, 3 ஆண்டுகளாக பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறோம்.
சிப்காட் தொழிற்பேட்டை அமைவதை தடுத்த நிறுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மனுவைப் பெற்ற இபிஎஸ், சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்த உடன் சிப்காட் திட்டம் ரத்து செய்யப்படும். எனவே இது குறித்து பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. உங்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் தங்கமணி செயல்படுவார் என கூறினார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி கிளம்பிச் சென்றார்.




