Close
மார்ச் 7, 2026 6:04 மணி

சோழவந்தான் அருகே முறையான முன்னேற்பாடு இல்லாமல் குறைந்த அளவு பயனாளிகளுடன் நடைபெற்ற அரசு விழா

சமயநல்லூர் அருகே, தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கி அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

தொடர்ந்து, காலை 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 50க்கும் குறைவான பயனாளிகளே வந்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் . இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனாளிகளை உடனடியாக அழைத்து வரும் படி அதிகாரிகள் கூறிய வண்ணம் இருந்தனர் .

சுமார் ஏழு மணி அளவில் அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சோழவந்தான் வெங்கடேசன் எம் .எல் .ஏ. ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அப்போதும் 50க்கும் குறைவான பயனாளிகளே இருந்தனர் .

இதனால் என்ன செய்வது என்று தெரியாத அமைச்சர் நிகழ்ச்சியை ஆரம்பிக்க கூறினார் . உடனடியாக அருகில் இருந்த காலி இடத்தில் பூமி பூஜை செய்து நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் ஏழு முப்பது மணி ஆகியும் பயனாளிகள் வராததால் , இருக்கும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு செல்லலாம் என குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பிக்க முயற்சி செய்தபோது அங்கு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யாதது தெரிய  வந்தது.

இதனால்  கடுப்பான அமைச்சர் அருகில் இருந்த வெங்கடேசன் எம். எல் .ஏ . மற்றும் அதிகாரிகளிடம் ஒலிபெருக்கி ஏன் ஏற்பாடு செய்யவில்லை என கேட்ட நிலையில் ஒலிபெருக்கி ஆப்ரேட்டர் இன்னும் வரவில்லை என கூறி சமாளித்தனர். நேரம் ஆவதால் நிகழ்ச்சியை தொடங்க முடிவு செய்த அமைச்சர் ஒலிபெருக்கி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல். ஏ. ஆகியோரை பேச சொன்னார் .

சுமார் 50க்கும் குறைவான பயனாளிகளே இருந்த நிலையில், வெங்கடேசன் எம். எல் .ஏ. அரசின் திட்டம் குறித்து மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும் நிலையில் பேசிக் கொண்டிருந்தார் . உடனே, எம்.எல்.ஏ. அருகில் வந்த அதிகாரி சத்தமாக பேசுங்கள் பயனாளிகளுக்கு கேட்கவில்லை என கூறிச் சென்றார்.

அப்போது அங்கு வந்த ஆப்ரேட்டர்கள் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தியதால், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் குழப்ப நிலையில் விழி பிதுங்கி நின்றனர்.

ஒரு வழியாக , சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் ஒலிபெருக்கிக்காக காத்திருந்த அமைச்சர் மூர்த்தி பேசத் தொடங்கினார். அப்போது, 400 பயனாளிகளுக்கு இங்கு வீடு ஒதுக்குவதாகவும் தற்போது 200 பேருக்கு வீட்டு மனை ஆணைகள் வழங்க இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் ,அங்கு இருந்ததோ சுமார் 50க்கும் குறைவான பயனாளிகளே இருந்தனர் . இதனால், திட்ட இயக்குனர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் என்ன செய்வதென்று அங்கும் இங்கும் ஓடியவாறு இருந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் கூறுகையில், இங்கே குடியிருப்புகள் ஆறு மாதத்தில் கட்டி முடிக்கப்படும் ஜனவரியில் ஸ்டாலின் புதிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் . 100 சதவீதம் ஸ்டாலின் கலந்து கொள்வார். வீட்டிற்கு குடியிருக்க வரும் 400 குடும்பங்கள் மற்றும் ஒரு குடும்பத்திற்கு மூன்று நபர்கள் என மொத்தம் 1200 பேர் இங்கு குடி வந்தவுடன் ரேஷன் கார்டுகளை இங்கு மாற்ற வேண்டும் அதேபோல், வாக்காளர் அட்டைகளையும் மாற்ற வேண்டும் என, பேசினார் .

இதனால், அங்கிருந்தவர்கள் 400 பயனாளிகளும் சோழவந்தான் தொகுதி மக்கள் என கூறினார்கள். தற்போது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை மாற்ற சொல்கிறார்கள் அப்படி என்றால் பக்கத்து தொகுதியில் உள்ள பயனாளிகளுக்கும் இங்கு வீடு ஒதுக்க இருக்கிறார்களா என கூறிச் சென்றனர்.

சோழவந்தான் தொகுதி ஏற்கனவே திமுகவிற்கு சாதகம் இல்லாத தொகுதியாக இருப்பதால் வேறு தொகுதியில் உள்ள வாக்காளர்களை இங்கு அமர்த்தி திமுக ஆதரவு வாக்குகளாக மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறதோ என பொதுமக்கள் கேள்வி கேட்டுச் சென்றனர் .

பொதுமக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி போதிய ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் 200 பேர் மற்றும் அவரது உறவினர்கள் என, 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொள்ள வேண்டிய அரசு நிகழ்ச்சியில் வெறும் 50க்கும் குறைவான நபர்களே கலந்து கொண்ட அவலம் சோழவந்தான் தொகுதியில் அரங்கேறியது.

தொடர்ந்து, திமுகவினர் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இது போன்ற ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவதால் இது போன்ற குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top