மோகனூரில் ரூ. 7.29 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கை எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, அணியாபுரம் என்.பி.எஸ். நகரில், பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரனிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, பார்லி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 29 லட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்காக பூமி பூஜை நடைபெற்றது. மாதேஸ்வரன், எம்.பி., தலைமை வகித்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
மேலும், நெய்க்காரன்பட்டி பேருந்து நிறுத்தம், மோகனூர் பேரூராட்சி காந்தமலை பாலசுப்ரமணியர் கோயில் அருகில், உயர் மின்கோபுர மின் விளக்கு (ஹைமாஸ்) அமைக்கவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா, ரூ. 3.50 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடக்க விழாவில், கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் கலந்துகொண்டு உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்தார். கொ.ம.தே.க., நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் பழனிமலை, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், பேரூராட்சி திமுக செயலாளர் செல்லவேல் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




