Close
மார்ச் 7, 2026 8:01 மணி

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி: துணை முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, தமுக்கம் மைதானத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மதுரை, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி கண்காட்சியில் 200 அரங்குகளில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழு மகளிரின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்திட 171 அரங்குகளும், குஜராத், ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா, பாண்டிச்சேரி, ஒரிசா, தெலுங்கானா, அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட 29 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கோயம்புத்தூர் ஐம்பொன் நகைகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டு சேலைகள், ஆரணி பட்டு, கொல்லிமலை மிளகு, நீலகிரி உல்லன் ஆடைகள், கடலூர் சுடுமண் பொம்மைகள், கைவினைப் பொருட்கள், கண்ணாடி ஓவியங்கள், சங்குகள் மற்றும் சிப்பி நகைகள், ஆயத்த ஆடைகள், வெட்டிவேர் பொருட்கள், பிரம்பு பொருட்கள், மூலிகைப் பொருட்கள், சணல் பொருட்கள், பனை பொருட்கள், கலம்காரி பைகள், கண்ணாடி மாலைகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குஜராத்தின் அகர் பத்திகள் மற்றும் வாசனை திரவியங்கள், ஆந்திராவின் அழகிய மரச் சிற்பங்கள், மேற்கு வங்காளத்தின் கையால் செய்யப்படும் ஆபரணங்கள், ஒரிசாவின் கைவினைப் பொருட்கள், தெலுங்கானாவின் கைத்தறி ஆடைகள், மகாராஷ்டிராவின் மூங்கில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட கலைநயம் மிகுந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்திட 29 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உடனடியாக உண்ணுவதற்கும் ஏற்ற (Ready to Eat) ஆயத்த உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையில் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை நேரங்களில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், மாடாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தெருக்கூத்து, பரதநாட்டியம், கருப்பசாமி ஆட்டம், கும்மிப்பாட்டு, குழு நடனம், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம், ராஜ மேளம், நையாண்டி மேளம் போன்ற இசை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டி, நாடகம் போன்றவையும் நடைபெறுகின்றன.
2025 நவம்பர் 22ம் தேதி முதல் 2025 டிசம்பர் 3ஆம் தேதி வரை மதுரை, தமுக்கம் மைதானத்தில் நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம்.

இந்நிகழ்ச்சியில் , அமைச்சர்கள் பி.மூர்த்தி, முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top