Close
மார்ச் 7, 2026 2:51 மணி

எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்க 10 மடங்கு கட்டணம் உயர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

தமிழ்நாடு

லாரிகள் -கோப்பு படம்

பழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி. கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பழைய வாகனங்களை கழிவு செய்ய (ஸ்கிராப்பிங்) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள். பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி., சான்றிதழ் புதுப்பிக்க கட்டணம் ரூ.2,500 ஆக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் எப்.சி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது.

அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு, எப்.சி. சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ. 12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ 25,000 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது.

சுமார் 10 மடங்கு வரை எப்.சி. சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் எப்.சி சான்றிதழை புதுப்பிக்காமல் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

எப்.சி. சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் நிறுத்தி வைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஒன்று, இரண்டு லாரிகள் வைத்து தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல மடங்கு எப்.சி. கட்டணம் செலுத்தி, தங்கள் லாரிகளை இயக்க முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழக அரசு எப்.சி. சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top