Close
ஏப்ரல் 24, 2026 3:57 காலை

இராணிப்பேட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்: ஓர் அறிமுகம்

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம், தமிழகத்தின் முக்கியத் தொழில்துறை மையமாகத் திகழ்கிறது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்தும் அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றன.

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தொகுதிகள்:

  • அரக்கோணம் (தனி – SC)
  • சோளிங்கர்
  • இராணிப்பேட்டை
  • ஆற்காடு

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி (எண்: 41)

இராணிப்பேட்டை நகராட்சி மற்றும் வாலாஜாபேட்டை வட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதி, மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியாகும். இத்தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவது வழக்கம். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆர். காந்தி (திமுக) வெற்றி பெற்று, தற்போது தமிழக அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் வளாகம் இத்தொகுதியின் பொருளாதார முதுகெலும்பாக உள்ளன.

இராணிப்பேட்டை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஆண்கள் 119090 , பெண்கள் 126719, மூன்றாம் பாலினம் 44, என மொத்தம் 245853 வாக்காளர்கள் உள்ளனர்

தொகுதி எண் 41 இராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக ஆர். காந்தி, தமாக வேட்பாளராக வி. எம். கார்த்திகேயன், நா.த.க. வேட்பாளராக தாரிக்கா சல்மான், த.வெ.க. வேட்பாளராக தாஹிரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி (எண்: 38 – தனி)

இது ஒரு தனித் தொகுதியாகும். அரக்கோணம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கியது. இத்தொகுதி ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. 2021 தேர்தலில் ரவி (அதிமுக) வெற்றி பெற்றார்.
தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பான அரக்கோணம் இரயில் நிலையம் மற்றும் கடற்படை விமானத் தளம் இங்கு அமைந்துள்ளன.

அரக்கோணம் தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஆண்கள் 96982 , பெண்கள் 102157, மூன்றாம் பாலினம் 26, என மொத்தம் 199165 வாக்காளர்கள் உள்ளனர்

தொகுதி எண் 38 அரக்கோணம் தொகுதியில் விசிக வேட்பாளராக எழில் கரோலின், அதிமுக வேட்பாளராக சு.ரவி, நா.த.க. வேட்பாளராக ராஜ்குமார், த.வெ.க. வேட்பாளராக காந்திராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி (எண்: 39)

சோளிங்கர் மற்றும் நெமிலி வட்டாரப் பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதி, ஆன்மீகம் மற்றும் விவசாயம் சார்ந்த தொகுதியாகும்.

2021 தேர்தலில் ஏ.எம். முனிரத்தினம் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.இங்குள்ள புகழ்பெற்ற யோக நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரபலம்.

சோளிங்கர் தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஆண்கள் 126034 , பெண்கள் 130072, மூன்றாம் பாலினம் 12, என மொத்தம் 256118 வாக்காளர்கள் உள்ளனர்

தொகுதி எண் 39 சோளிங்கர் தொகுதியில் இதேகா வேட்பாளராக முனி ரத்னம், பாமக வேட்பாளராக க. சரவணன், நா.த.க. வேட்பாளராக அசோக்குமார், த.வெ.க. வேட்பாளராக கபில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி (எண்: 42)

ஆற்காடு நகராட்சி மற்றும் திமிரி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியது. 2021 தேர்தலில் ஜே.எல். ஈஸ்வரப்பன் (திமுக) வெற்றி பெற்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க நவாப்களின் ஆட்சி பீடமாக விளங்கிய ஆற்காடு, தற்போது விவசாயம் மற்றும் சிறு வணிகங்களுக்குப் பெயர் பெற்றது.

தொகுதி எண் 42 ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளராக ஈசுவரப்பன், அதிமுக வேட்பாளராக எஸ்.எம். சுகுமார், நா.த.க. வேட்பாளராக அர்ச்சனா, த.வெ.க. வேட்பாளராக விஜய் மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

ஆற்காடு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஆண்கள் 119107 , பெண்கள் 124429, மூன்றாம் பாலினம் 29, என மொத்தம் 243565 வாக்காளர்கள் உள்ளனர்

முக்கியப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள்:

இராணிப்பேட்டை மாவட்டத் தொகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபடுதல் (தோல் தொழிற்சாலைக் கழிவுகளால்), விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதிகள் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை தொடர்ந்து முக்கியத் தேர்தல் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top