Close
மே 26, 2026 10:54 மணி

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம்

ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கத்தின் மாநில அமைப்பாளர் பழனிவேலன்

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் பழனிவேலன் கூறியதாவது,

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு தற்போது வரை அரசின் விதிமுறைகள் வரையறுக்கப்படாததால் ஜனவரி2026 இல் இருந்து ஓய்வு பெற்றவர்கள் எந்த திட்டத்தின் கீழ் பணப்பலன் பெறுவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய புதிய அரசு உடனடியாக இக்குழப்பத்திற்கான காரணங்களை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஏப்ரல்2003க்குப் பின் அரசு பணி பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து புதிய ஓய்வூதிய திட்டம் என அரசு நடைமுறைப் படுத்தியது.

ஆனால் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமென தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த திமுக அரசு ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கடந்த திமுக அரசு அறிமுகப்படுத்திய ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது. ஆனால் அதற்கான விதிமுறைகளை முறையாக வெளியிடவில்லை.. விதிமுறைகள் இல்லா நிலையில் தேர்தலும் வந்தது அதன் பின் தற்போது ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திமுக அரசு அறிவித்த தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தற்போது நடை முறைப்படுத்தப்படுமா என்றும் தெரியவில்லை.

இதன்படி ஜனவரி 2026 க்கு பின்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக எத்திட்டத்தின் கீழ் ஓய்வு பணப்பலன்களை எவ்வாறு பெறுவது என பெரும் குழப்ப நிலையில் உள்ளனர்.

மேலும் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியாக தருவோம் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதை அரசு ஊழியர்கள் பெரிதும் நம்பி உள்ளனர்.

இந்த நிலையில் புதிய தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தருமா எனும் ஆர்வ மனநிலையில் உள்ளனர்

மேலும் ஏப்ரல் 2003 இல் இருந்து அரசுப் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்கள் சுமார் 59 ஆயிரம் பேர் உள்ளதாக தெரிய வருகிறது

இவர்களுக்கும் கடந்த திமுக அரசு நாமினல் பென்ஷன் தருவதாக கூறியுள்ளனர். இவர்களும் புதிய அரசு என்ன தரும் எனும் சூழ்நிலையில் உள்ளனர்

அதனால் தற்போதைய தமிழக வெற்றி கழக அரசு ஓய்வு பெற்றுள்ள அரசு ஊழியர்களின் தற்போதைய நிலையை உணர்ந்து விரைவில் முதன்மைப் பணியாக ஓய்வூதிய திட்டம் குறித்து நல்ல முடிவை எடுத்தல் வேண்டும் என கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top