Close
ஜூன் 28, 2026 1:17 காலை

காடுகள் அழிப்பு: விரைவில் பாலைவனமாகும் தமிழ்நாடு

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வேளையில், தமிழகத்தின் சுற்றுச்சூழல் அரணாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை புதிய ஆய்வு ஒன்றின் மூலம் வெளிவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய புதிய ஆய்வின்படி, வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 720 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பசுமை மாறாக் காடுகளும் இலையுதிர்க் காடுகளும் அழியும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற சர்வதேச இதழில் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானிகளான ஆண்டிமுத்து ராமச்சந்திரன், மிதிலாஸ்ரீ மாணிக்கவாசகம் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய குழுவினர், கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் முதல் 2,637 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள 929 காப்புக்காடுகளில் விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டனர்

மேம்பட்ட சுற்றுச்சூழல் கணிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி, 2021 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் காடுகளின் பரவல் எவ்வாறு மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 248.72 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள் தங்களின் வாழ்விடத் தன்மையை இழக்கும்.  சுமார் 720.21 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இலையுதிர்க் காடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படும்.  இந்த பசுமைக் காடுகள் அழிந்து, அதற்குப் பதிலாக வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடிய முள் காடுகள் சுமார் 968.93 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் புதிதாக விரிவடையும்.

இந்த மோசமான சுற்றுச்சூழல் மாற்றம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை மற்றும் இலையுதிர்க் காடுகள் பெருமளவில் குறைந்து, முள் தாவரங்கள் கிட்டத்தட்ட 88 ச.கி.மீ பரப்பளவிற்கு அதிகரிக்கும். பல்லுயிர் பெருக்கத்திற்குப் புகழ்பெற்ற நீலகிரி மலையிலும் பசுமை மாறாக் காடுகளின் சூழல் அமைப்பு சிதையும் அபாயம் உள்ளது.

ஈரப்பதமான காடுகளைக் கொண்ட திருநெல்வேலி பகுதி, 120 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான காடுகளின் பரப்பை இழக்க நேரிடும்.  இதேபோன்ற ஆபத்தான போக்கு தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை, தென்னிந்தியாவின் காலநிலை மற்றும் நீர் ஆதாரங்களைச் சீரமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பவானி, வைகை, தாமிரபரணி போன்ற முக்கிய நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இதுவே திகழ்கிறது.  பருவமழை பொழிவில் ஏற்படும் மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு காரணமாக தாவரங்கள் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களை இழந்து வருகின்றன.

பசுமைக் காடுகள் முள் காடுகளாக மாறுவது என்பது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சிதைவைக் காட்டுகிறது. முள் காடுகளால் அதிகப்படியான அரிய வகை விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் புகலிடம் அளிக்க முடியாது.

இது குறித்துப் பேசிய சூழலியல் செயல்பாட்டாளர் ஓசை காளிதாசன், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்கனவே நம் கண் முன்னே நிகழத் தொடங்கிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாக, உதகை தொட்டபெட்டா சிகரத்தில் சமீபத்தில் யானைகள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அதேபோல, வழக்கமாக 1,000 மீட்டருக்கு மேல் வாழாத மயில்கள், தற்போது காலநிலை மாற்றத்தின் விளைவாக 2,000 மீட்டர் உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.

மாறிவரும் வெப்பநிலை மற்றும் சீரற்ற மழையளவு ஆகியவை இந்த பேராபத்திற்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. உடனடியாகக் காடுகளைப் பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை பெரும் பாலைவனமாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top