சுறுசுறுப்பு, விடாமுயற்சி, சேமிப்பு, கூட்டு உழைப்பு போன்ற நேர்மறைப் பண்புகளுக்குச் சிறந்த உதாரணம் எறும்புகள். மனிதர்களைப் போலவே எறும்புகளும் சமூகமாக, கூட்டமாக வாழ்வதை விரும்புகின்றன. ஆனால், இப்படி நெருக்கமாகக் கூடி வாழ்வதில் ஒரு பெரிய ஆபத்தும் இருக்கிறது; அதுதான் நோய்த்தொற்று
மனிதர்களாகிய நாம் இன்ஃப்ளூயன்சா, கொரோனா போன்ற நோய்த்தொற்றுகள் பரவும்போது என்ன செய்கிறோம்? அறிகுறிகள் தெரிந்தவுடன் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம், முகக்கவசம் அணிகிறோம், சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறோம்.
இதேபோன்ற, இன்னும் சொல்லப்போனால் நம்மை விடவும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளையும் கூட்டு ஒழுக்கத்தையும் எறும்புகள் தங்கள் காலனிகளில் பின்பற்றுகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வளரும் அறிவியல் ஆய்வுகள் காட்டும் அந்த வியப்பூட்டும் உண்மைகள்
சமூக நோய் எதிர்ப்புச் சக்தி
சில எறும்பு இனங்களில், ஒரு தொற்று பரவத் தொடங்கினால், அவை தங்கள் உடலின் ‘மெடாப்ளூரல் சுரப்பியில்’ இருந்து சுரக்கும் ஒருவகை நுண்ணுயிர் எதிர்ப்புத் திரவத்தை தங்கள் உடலிலும், வளரும் லார்வாக்கள் மீதும், கூட்டில் உள்ள மற்ற எறும்புகள் மீதும் தடவி விடுகின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்தக் கூட்டுக்கும் ஒரு பொதுவான பாதுகாப்பு வளையம் கிடைக்கிறது.
கால்களைத் துண்டிக்கும் ‘அறுவை சிகிச்சை’
சுவிட்சர்லாந்தில் உள்ள லொசான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2024ம் ஆண்டு ஒரு விசித்திரமான பரிசோதனையைச் செய்தனர். காலில் காயம் ஏற்பட்ட ஒரு கருப்பு எறும்பைக் கூட்டுக்குள் விட்டபோது, சக எறும்புகள் அதன் காயம் பட்ட காலைத் தங்கள் வாயால் கடித்துத் துண்டித்தன. காயம் பட்ட கால் அழுகி, அதன் மூலம் நோய்க்கிருமிகள் பரவி ஒட்டுமொத்த கூட்டையும் அழித்துவிடக் கூடாது என்பதற்காக எறும்புகள் இந்த அதிதிவிரமான முடிவை எடுக்கின்றன.
எறும்புகளின் ‘சுய தனிமைப்படுத்தல்’
சமீபத்தில், 2025ம் ஆண்டு ‘சயின்ஸ்’ இதழில் வெளியான ஓர் ஆய்வு, ஒரு பெருந்தொற்று ஏற்படும்போது எறும்புக் கூட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணித்தது.
நம் வீடுகளில் காணப்படும் இந்தியக் கருப்பு எறும்புகளின் நெருங்கிய உறவினரான ‘கருப்புத் தோட்ட எறும்புகளை’ வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அவற்றின் முதுகில் சிறிய கியூஆர்கோடுகள் ஒட்டப்பட்டு, வீடியோ கேமராக்கள் மற்றும் மைக்ரோ-சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
பூஞ்சைத் தொற்று பாதித்த சில எறும்புகள் கூட்டுக்குள் விடப்பட்டபோது, வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன: தொற்று பாதித்த எறும்புகள் தானாகவே கூட்டுக்கு வெளியே அதிக நேரத்தைச் செலவிட்டன. அதாவது, மனிதர்களைப் போல தங்களை தாங்களே சுய தனிமைப்படுத்தல் செய்துகொண்டன.
தொற்று பரவத் தொடங்கியதும், எறும்புகள் தங்கள் நிலத்தடி கூட்டின் கட்டமைப்பையே மாற்றியமைத்தன: கூட்டின் நுழைவாயில்களை வழக்கம் போல நெருக்கமாக வைக்காமல், தூரத் தூரமாக மாற்றின. எறும்புகள் மிக வேகமாக வேலை செய்து, நீண்ட சுரங்கப் பாதைகளை அமைத்தன. வெவ்வேறு அறைகளுக்கு இடையே இருந்த இணைப்புகளைக் குறைத்தன.
இந்த மாற்றங்களால், எறும்புக் கூட்டம் வெவ்வேறு சிறு குழுக்களாகப் பிரிந்தன. இதனால் கூட்டின் மிக முக்கியமான உறுப்பினர்களான ராணி எறும்பு மற்றும் குட்டிகளைப் பராமரிக்கும் செவிலி எறும்புகளுக்கு, வெளியில் சென்று உணவு தேடும் எறும்புகளிடம் இருந்து தொற்று பரவாமல் அவை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன.
மனிதர்கள் முகக்கவசம் அணிவதையும், கைகளைக் கழுவுவதையும், லாக்டவுன் போடுவதையும் மிகச் சமீபகாலமாகத்தான் கற்றுக்கொண்டோம். ஆனால், இயற்கையிலேயே எறும்புகள் தங்களின் பரிணாம வளர்ச்சியின் மூலமாகவே மிகச் சிறந்த ‘சமூக இடைவெளி’ முறைகளைக் கற்றுக்கொண்டு, தங்களின் ஒட்டுமொத்த இனத்தையும் நோய்த்தொற்றுகளில் இருந்து காப்பாற்றி வருகின்றன என்பது ஆச்சரியமான உண்மை!

