Close
ஜூலை 3, 2026 12:36 காலை

திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை அடிஅண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை என்றாலே நினைவுக்கு வரும் பிரமாண்டமான அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் புகழ்பெற்றது. ஆனால், இந்தக் கோவிலின் ஆதி வடிவமாகப் போற்றப்படும், மற்றொரு தொன்மையான ஆலயம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்  சுமார் 7 முதல் 9 கிலோமீட்டர் தொலைவில், அடி அண்ணாமலை என்ற கிராமத்தில் வீற்றிருக்கும் இந்தத் திருத்தலமே ‘ஆதி அண்ணாமலையார் கோவில்’ ஆகும்.

பிரம்மதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவரையும், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய இடத்தையும் கொண்ட இக்கோவில், திருவண்ணாமலையின் ஆன்மீகப் பெருமைகளில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் ‘ஆதி அண்ணாமலையார்’ ஆவார். இந்த சிவலிங்கத்தை படைப்புக் கடவுளான பிரம்மதேவரே தன் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், தனது புகழ்பெற்ற திருவெம்பாவையை இத்தலத்தில்தான் பாடியதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் அருகே உள்ள குளம், திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் “பொங்குமடு” (மடுகுளம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய புராண சம்பந்தமும், திலோத்தமை மீது மோகம் கொண்டதினால் பிரம்மா பெற்ற சாபத்தின் சம்பந்தமும் கொண்ட புராண தொடர்புடைய ஸ்தலம்.

இக்கோயிலில் இருந்து அருணாசலத்தைக் காண்பது சிவ யோக முக தரிசனம் என்று அழைக்கப்படுகிறது என்றும், மகா சித்தரான திருமூலர் இந்த தரிசனத்தைக் கண்டார் என்றும் கூறப்படுகிறது. கிரிவலம் செய்யும் போது ஆதி அண்ணாமலையில் 2-3 இரவுகள் வரை முகாமிட்டுத் தங்கியிருந்த பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, அங்கு இருந்தபோது ‘சாம வேதத்தின்’ தெய்வீக பாராயணத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் உண்ணாமுலை அம்மன் உடனாகிய ஆதி அருணாசலேசுவரர் திருக்கோயில் அடிஅண்ணாமலை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.  கடந்த 26ம் தேதி விக்கனஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29,30,01 ம் தேதி யாகசாலை பிரவேசம், யாக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று இன்று காலை நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து. இன்று வியாழக்கிழமை விடியற்காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் பரிவாரமூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம். மற்ற பூர்ணாஹுதி, யாத்ராதானாம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சகல் விமானங்களுக்கும் காலத்தில் மஹாகும்பாபிஷேகம்,  சுவாமி-அம்பாள் (மூலவர்) மஹாகும்பாபிஷேகம் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற சிவ முழக்கத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன், கோயில் தக்கார் மீனாட்சி சுந்தரம்,  இளவரசு பட்டம் ரமேஷ் சிவாச்சாரியார், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்,திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களான அடி அண்ணாமலை, கோசாலை, ஆடையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சிவபக்தர்கள் ஆன்மீக பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

யாக பூஜைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top