சேலம் – நாமக்கல் – கரூர் இருவழி ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி பணிகளை தொடங்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சேலம் – நாமக்கல் – கரூர் இடையேயான, 85 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதை, 2013ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இப்பாதையில் தினசரி, 26 ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ஏராளமான சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், நாமக்கல் மாவட்டத்தின் கோழித் தீவன தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சராசரியாக வாரத்திற்கு, 5 சரக்கு ரயில்கள், நாமக்கல் நிலையத்திற்கு வந்து சரக்குகளை இறக்குகின்றன. இதனால், இப்பாதையில் சரக்கு போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலம் – ஈரோடு – கரூர் வழித்தடத்திற்கு மாற்றாக, இந்த பாதை மிகவும் முக்கியமானதாகும். ஈரோடு வழியாக செல்லும் ரயில்களுக்கு, இன்ஜின் மாற்றம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பயண நேரம் இரண்டரை மணிநேரமாகிறது. ஆனால், சேலம் – நாமக்கல் – கரூர் வழியாக அதே பயணத்தை, ஒன்றறை மணி நேரத்தில் முடிக்க முடிகிறது. இதனால் நேரம், எரிபொருள் மற்றும் இயக்கச் செலவுகள் கணிசமாக குறைகின்றன.
இந்த பாதையில் நெரிசலை குறைப்பதற்காக, இருவழி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட ஆய்வு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது. தற்போது, மத்திய அரசின் ஒப்புதலை மட்டுமே எதிர்நோக்கி உள்ளது. தற்போது, இந்த 85 கி.மீ., பாதை முழுவதும், ஒற்றை வழிப்பாதையாக இருப்பதால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதில் பல்வேறு செயல்பாட்டு சவால்கள் ஏற்படுகின்றன.
மேலும், இப்பாதை ஒரு முக்கிய தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. ஒருபுறம் பெங்களூரு, மறுபுறம் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய ரயில் வழித்தடமாக இது செயல்படுகிறது.
எனவே, சேலம் – நாமக்கல் – கரூர் இருவழிப்பாதைத் திட்டத்திற்கு, நடப்பு ஆண்டிலேயே நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி, பணிகளை உடனடியாக தொடங்கி, 2029க்குள் திட்டத்தை நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் நிறைவேறினால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இயக்கத்திறன் அதிகரிப்பதுடன், தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழகத்தின் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




