தமிழகத்தில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
மத்திய அரசு அறிவித்துள்ள, 2025-2030ம் ஆண்டிற்கான, அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைக்கான தேசிய செயல்திட்டம் குறித்த கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு சிட்பண்ட்ஸ் அசோசியேசன் மற்றும் சேலம் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சிட்பண்ட் அசோசியேசன் மாநில தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ திலீப், சேலம் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:
ஏலச்சீட்டுகள் நடத்தும் நிறுவனங்கள் இந்திய அளவில், தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் உள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடம் சேமிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் சேமிப்பு பழக்கம் குறைவு. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து சாதாரன மக்கள் முதல் பெரிய தொழில் அதிபர்கள் வரை சேமிப்பை ஈர்ப்பதில் சீட்டு நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.
1991-96 ஆண்டு வாக்கில் பல சீட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததால் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சீட்டு கம்பெனிகளை புறக்கணிக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு பதிவு செய்யப்பட்டு சீட்டு நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வருகின்றனர்.
தற்போதுள்ள இளைஞர்களையும், பெண்களையும் அதிகமாக சீட்டுகளில் சேர்த்து அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சீட்டு கம்பெனிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சீட்டுகளில் சேர்ந்து பணம் சேமித்து அந்த பணத்தை திரும்ப்பபெறும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், எனவே சிட்பண்ட்டில் சேமிக்கும் பணத்திற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளீர்கள். இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து மத்திய நிதியமைச்சகத்திற்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படும்.
பதிவு செய்யாத சீட்டு கம்பெனிகள், பொதுமக்களிடம் சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. எனவே பதிவு செய்யாமல் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து சிட்பண்ட் சங்கத்தினர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏலச் சீட்டுகள் மற்றும் சொத்துக்களை பதிவு செய்வதற்காக சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆவணங்களை பெறுவதற்கான ஸ்டார் 3.0 என் புதிய வெப்சைட் உருவாக்கம் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் பத்திரப்பதிவு நடைமுறை முழுயைõக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.




