Close
ஆகஸ்ட் 14, 2026 4:11 மணி

தேனி அல்லிநகரம் புதிய பேருந்து நிலைய பிரதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை, பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருந்து வருகிறது. இந்தச் சாலையைச் சீரமைக்கக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தாலுகா செயலாளர் ஆர். வெள்ளைப்பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி தொழிற்சங்க செயலாளர் ராஜதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நகரச்செயலாளர் காடுவெட்டி கருப்பு, இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்:

இந்தக் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விசிக நிர்வாகிகள் வெற்றி, முத்துப்பிச்சை, செல்லத்தம்பி, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கணேசன், வேல்முருகன், பாலா, ரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி நிர்வாகி கீர்த்தி பிரியா மற்றும் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி வெள்ளையன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், நகராட்சி நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்துச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சி நிர்வாகத் தரப்பில், குறிப்பிட்ட சாலைப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி கோரிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சாலைச் சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top