தமிழகத்தில் முந்தைய ஆட்சிக்காலங்களில் நிலவியதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகள் மற்றும் கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
சிறிய அளவிலான பொதுப்பணித் திட்டங்களுக்கும் “முன்னரே தீர்மானிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே” என்றில்லாமல், அனைவருக்குமான வெளிப்படையான போட்டி டெண்டர் முறையை கட்டாயமாக்கியதன் மூலம் தமிழக அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகி வருகிறது.
முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையே தனது நிர்வாகத்தின் அடித்தளம் எனப் பிரகடனப்படுத்திய விஜய்யின் இந்த அதிரடி மாற்றங்களை அரசு ஒப்பந்ததாரர்களே வியந்து பாராட்டியுள்ளனர்.
இதற்கு உதாரணமாகச் சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் நடைமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த சாலை சீரமைப்புத் திட்டத்திற்கான டெண்டரில் 9 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் 8 பேர் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டை விடக் குறைவான தொகைக்குக் குறிப்பிட்டிருந்தனர்.
இறுதியில், ஒரு ஒப்பந்ததாரர் அரசு மதிப்பீட்டை விட 25.9 விழுக்காடு குறைவான விலையைக் குறிப்பிட்டு, வெறும் ரூ. 16 முதல் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் அந்தப் பணியை எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே ஒரு டெண்டரில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு ரூ. 9 லட்சம் வரை மிச்சமாகியுள்ளது.
இதேபோல் தண்டையார்பேட்டையில் ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு திட்டத்திற்கு, ஒப்பந்ததாரர்கள் தங்களது ஏலத்தொகையை 25% வரை குறைத்துக் கேட்டுள்ளனர். சோழிங்கநல்லூரில் இந்த விலை இன்னும் ஒரு படி மேலே போய், அரசு மதிப்பீட்டை விட 36% வரை குறைவாகக் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வளவு குறைந்த விலைக்கு ஒப்பந்தம் எடுக்கப்படுவதால், கட்டுமானத் தரம் பாதிக்கப்படாமல் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
முந்தைய ஆட்சிகளில் திட்ட மதிப்புகள் எவ்வாறு உயர்த்தப்பட்டன?
“கடந்த காலங்களில் இத்தகைய டெண்டர்கள் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை விட 10 விழுக்காடு கூடுதல் தொகைக்கே வழங்கப்பட்டு வந்தன. உதாரணமாக ரூ. 25 லட்சம் திட்டத்தை ஒப்பந்ததாரர்கள் ரூ. 27.5 லட்சத்திற்குச் செய்தனர். ஆனால் இன்று அதே வேலை வெறும் ரூ. 16 லட்சத்திற்குச் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் 35-40% வரை பட்ஜெட்டை உயர்த்த அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்பது கேள்விக்குறியே” என்று சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதுகுறித்து பேசுகையில், முந்தைய ஆட்சிகளில் திட்டமிட்ட விதிமீறல்கள், மையப்படுத்தப்பட்ட ஊழல் மற்றும் லஞ்சம் மூலம் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் எந்தவித கமிஷனோ, லஞ்சமோ இன்றி முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே ஒதுக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் இந்த புதிய நிர்வாக முறையை உற்றுநோக்கும் நிதி வல்லுநர்கள், முந்தைய ஆட்சிகளில் நிலவியதாகக் கூறப்படும் “40% கமிஷன் கலாச்சாரத்தை” முதல்வர் விஜய் முற்றிலும் ஒழித்து, ‘0% லஞ்சம்’ என்ற நிலையை நோக்கிச் கொண்டு செல்வது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஒரு சிறந்த முன்மாதிரியாக மாறும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.




