நாடகங்களிலும், திரைப்படங்களிலும், தொடக்கமென்பது, சராசரியான, பல்வேறுவிதமான, கடவுள் வாழ்த்துப் பாடல்களுடன் ஆரம்பிக்கும். இவ்வழக்கத்தை மாற்றி, தனது நாடகம் மற்றும் திரைப்படங்களில், திருக்குறளின் முதற்குறளுடன் ஆரம்பிக்கும் மரபைப் புகுத்தியவர் கே.பாலச்சந்தர்தான்.
இதன்மூலம் திருக்குறளின் தாக்கம், திரைப்படங்கள்/நாடகங்களிலும் கணிசமான அளவில் இருக்கும்படி செய்தவர். பாரதியாரை, மிகவும் மதித்து நேசித்தவர். இவரளவிற்கு, பாரதியாரை, தன் படங்களில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குநர்கள் யாருமிலர்.
ஏராளமான நடிகர்கள், தொழிற் நுட்ப கலைஞர்களை, தன் இயக்கத்திலும், தயாரிப்பிலும் அறிமுகப்படுத்திய பெருமை பாலச்சந்தரையே சேரும்.
இவருடைய மானசீக முன்னோடி இயக்குநர் ஶ்ரீதர். அதனால் தான் அவரைப்போலவே பல்வேறு விதமான கதைக்களங்கள் கொண்ட படங்களை இயக்கினார். பல புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தினார்.
சில சமயங்களில், வித்யாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, முற்போக்குத்தனமான காட்சிகளாகவே கொண்டுசென்று, இறுதியில் பாரம்பரிய மரபுவழி சார்ந்த முடிவுகளுடனேயே முடித்துவிடுவார்.
தான் இயக்கிய முதல்படத்திற்கு “நீர்க்குமிழி” என்று பெயர்வைத்தார் பாலச்சந்தர். இது, அமங்கலமான தலைப்பாக உள்ளதால், படம் ஓடாதெனக்கூறி, பலரும் தலைப்பை மாற்றக்கூறினர். எனினும், பாலச்சந்தர் மறுத்துவிட்டார். ஆனாலும், படம் வெற்றிபெற்றது.
தன் முதல்படத்திற்கே, அமங்கலப்பொருள்தொனியில் தலைப்புவைத்த முதல் இயக்குநர் பாலச்சந்தரே. பெண்ணியம், அரசியல், காதல், சமூகம், பாலியல், குடும்பம், நகைச்சுவை உள்ளிட்ட பலதுறைகள் சார்ந்த கதைகளையும், விரசமோ, வன்முறையோ இல்லாமல், நல்ல திரைப்படங்களாக உருவாக்கிய, தமிழ்ப்பட உலகின் சிறந்த இயக்குநர்களுள் ஒருவர்.
இங்கிலாந்திலிருந்து சங்கர்




