கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கால்நடை மருத்துவருமான டாக்டர் செந்தில், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, இரும்புளிக்குறிச்சி பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு தமிக அரசின் சார்பில் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டைத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில் வளர்ச்சியடைந்து, தற்போது, நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இத்தொழில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான பொருளாதாரத்தை உருவாக்கி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்தியாவின் முக்கிய முட்டை ஏற்றுமதி மையமாகவும் நாமக்கல் திகழ்கிறது.
உலகத் தரம் வாய்ந்த கோழித் தொழில் மையத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பது மிகவும் ஆபத்தானதாகும். பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அதிக அளவிலான பறவைகள் இங்கு வரும். அவற்றின் மூலம் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பது உலகளவில் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகும்.
ஒருமுறை பறவைக் காய்ச்சல் பரவினால், லட்சக்கணக்கான கோழிகளை அழிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையை இழக்கும் அபாயம் ஏற்படும். பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உயிரினப் பன்முகத்தன்மை பாதுகாப்பும் அவசியமானவை என்பதில் எங்களுக்கு முழு ஒப்புதல் உள்ளது. ஆனால், அதற்காக ஒரு முக்கியமான வேளாண் மற்றும் ஏற்றுமதி தொழிலை ஆபத்தில் தள்ளும் வகையில் முடிவெடுக்கக் கூடாது.
இடம்விட்டு இடம் செல்லும் பறவைகள் மூலமே பறவைக்காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுநோய்கள் பரவுகிறது என்பது பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு, கோழித் தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.
எனவே, நாமக்கல் மாவட்டம், இரும்புளிக்குறிச்சி பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முன்மொழிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.




