Close
ஆகஸ்ட் 13, 2026 11:32 மணி

நாமக்கல்-பெரம்பலூர் புதிய ரயில்பாதை திட்டம் விரைவில் துவக்க அமைச்சரிடம் எம்.பிக்கள் கோரிக்கை

நாமக்கல் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் – பெரம்லூர் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவில் துவக்கவேண்டும் என நாமக்கல் எம்.பிக்கள் மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து, திமுக ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், நாமக்கல் மக்களவை கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் ஆகியோர் டில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மக்களவை தொகுதியில் சில முக்கிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இந்தத் திட்டங்கள் ரயில் இணைப்பை மேம்படுத்துவதற்கும், சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கும், தொழில்துறை வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், மேற்கு மற்றும் மத்திய தமிழ்நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் தேவையானதாகும்.

முக்கியமாக நாமக்கல் – அரியலூர் புதிய ரயில் ரயில் பாதைக்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, இறுதி இட ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைவாக முடித்து, ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த புதிய ரயில் பாதை, மேற்கு மற்றும் மத்திய தமிழ்நாட்டிற்கு இடையே நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தி, பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

முக்கியமாக, தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத ஒரே மாவட்டமான பெரம்பலூருக்கு, இந்தத் திட்டம் மூலம் ரயில் வசதியை வழங்க முடியும். எனவே இந்த புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் துவங்குவதற்கும், ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top