நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் மூலம் போட்டோ எடுப்பதும், வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கோயிலின் அமைதி கெடுவதுடன், பூஜை முறைகளுக்கும் மற்ற பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது.
எனவே கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என பலர் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பி வந்தனர். இந்த நிலையில், தமிழகத்திலுள்ள முக்கியக் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல, வரும் செப்டம்பர் 1 முதல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வமாக முழு தடை விதித்துள்ளது.
கோயிலின் உள்ளே போட்டோ, வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இதற்காக, கோயில்களின் நுழைவாயில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க லாக்கர்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும் என தெரிகிறது.
நாமக்கல்லில் புகழ் பெற்ற நாமகிரித் தாயார் உடனுரை நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோயிலில் வழக்கமாக ஏராளமான பக்தர்கள் செல்போன் மூலம் மூலவரையும் சேர்த்து போட்டோ, வீடியோ மற்றும் செல்பி எடுத்து வந்தனர்.
செப். 1 முதல் கோயில்களுக்குள் செல்போன், கேமரா எடுத்துச் செல்ல தடை அமலுக்கு வர உள்ள நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் முதல்கட்டமாக செல்போன் மற்றும் கேமரா மூலம் போட்டோ, வீடியோ எடுப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி கோயில் நிர்வாகத்தின் மூலம் கோயில் நுழைவு வாயிலில் இதற்கான அறிவிப்பு போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.




