Close
ஆகஸ்ட் 14, 2026 11:38 மணி

சாவர்க்கர் குறித்த கருத்து: ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

இந்துத்துவ தலைவரான சாவர்க்கர் குறித்துப் பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மற்றும் உ,பி விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படி தேவையான அரசின் அனுமதி பெறப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற ‘பாரத் ஜோடோ யாத்திரை’ பேரணியின் போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துகள் தொடர்பாக வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே என்பவரால் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது

நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நகு ஆகியோரைக் கொண்ட பெஞ்ச்   ராகுல் காந்தியின் மனுவை விசாரித்தது. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 153A (பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல்) கீழ் தொடரப்படும் வழக்குகளுக்கு மாநில அரசின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.  இது குறித்து உ.பி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், வழக்குத் தொடர்வதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனுமதி அளிக்கப்படாத நிலையில், இந்த வழக்கு மற்றும் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தி திட்டமிட்டு சாவர்க்கரை அவமதித்ததாகவும் சமூகத்தில் பகைமையை ஏற்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னதாக, லக்னோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய அலகாபாத் ஐகோர்ட் மறுத்ததை அடுத்து, ராகுல் காந்தி சுப்ரீம்கோர்ட்டை அணுகினார்.

கடந்த விசாரணைகளின் போது, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிப் பேசும்போது பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்று ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்திருந்த சுப்ரீம்கோர்ட் விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. தற்போது சட்டப்பூர்வமான அனுமதி இல்லாத காரணத்தைச் சுட்டிக்காட்டி வழக்கை முழுமையாக ரத்து செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top