நாட்டின் 80-வது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க டில்லி செங்கோட்டையில் பல அடுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் படைகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுதந்திரத் தின விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதனைத் தொடர்ந்து தலைநகர் டில்லி முழுவதும் பாதுகாப்பு முகமைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டில்லி வடக்குப்பகுதி டிசிபி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில், விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச அசௌகரியமே ஏற்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசரநிலை அல்லது அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்ட பரிசோதனைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய, முன்கூட்டியே பயிற்சிகளும், ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
செங்கோட்டையின் உள்பகுதி மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் ஏஐ அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலை காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், மூலோபாய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள குழுக்கள் உடனடியாகச் செயல்படும் என்று கூறினார்
செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் மற்றும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தீவிர பாதுகாப்புத் தணிக்கைகளால் பார்வையாளர்களுக்குத் தேவையின்றி எவ்வித சிரமமும் ஏற்படாத வண்ணம் காவல்துறை வழிமுறைகளை வகுத்துள்ளது.
டில்லியின்முக்கிய அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான பகுதிகள் அனைத்திலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, டில்லி முழுவதுமே உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.




