Close
ஆகஸ்ட் 15, 2026 11:08 மணி

சிவகங்கையில் கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர் ஆகாஷ்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், ஐ.ஏ.எஸ். தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினரின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களைப் பறக்கவிட்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குப் பொன்னாடை போர்த்தி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை: 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,25,845 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்புச் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள்.

முன்னாள் படைவீரர் நலத்துறை: 3 பயனாளிகளுக்கு ரூ.1,25,000 மதிப்பிலான தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கான ஆணைகள்.

வேளாண்மைத் துறை: 3 பயனாளிகளுக்கு ரூ.14,560 மதிப்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (மக்காச்சோளம் செயல் விளக்க திடல்), 100% மானியத்தில் மரக்கன்றுகள் மற்றும் 50% மானியத்தில் உளுந்து விதைகள்.

மொத்தமாக 8 பயனாளிகளுக்கு ரூ.2,65,405 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்.

காவல்துறையில் மிகச்சிறப்பாகப் பணியாற்றிய 52 காவலர்களுக்கும், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 74 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அவர்களின் சேவையை பாராட்டி நற்சான்றிதழ்களையும் கேடயங்களையும் ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் மாணவர்களின் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட வீரம் செறிந்த வீரகலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றுப் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ்., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், ஐ.ஏ.எஸ்., சட்டமன்ற உறுப்பினர்கள் குழந்தை ராணி நாச்சியார் (சிவகங்கை), இளங்கோவன் (மானாமதுரை), மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செல்வசுரபி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் ஜெஃபி கிரேசியா மற்றும் அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top