Close
ஆகஸ்ட் 25, 2026 12:35 காலை

இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துவிட்டது: காங். குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே

இந்திய இளைஞர்களின் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரையிலான ஒட்டுமொத்தப் பாதையையும் மோடி தலைமையிலான மத்திய அரசு “முற்றிலுமாகச் சீரழித்துவிட்டது” என்று காங். கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதிகச் செலவு பிடிக்கும் கல்வி முறை, நம்பிக்கை இல்லாத தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு தராத பட்டங்கள் ஆகியவற்றையே இந்த அரசு இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது என்றும் சாடியுள்ளது.

நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வியோ, வேலையோ அல்லது எந்தவிதமான தொழிற்பயிற்சியோ பெறாமல் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, நிதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இந்திய இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி பெறாத சூழலில் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 88% இளைஞர்கள் வீட்டுப் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஜூலை 2026-ன் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, இளைஞர்களிடையேயான வேலையில்லா திண்டாட்டம் 15.6% ஆக உள்ளது. குறிப்பாக இளம் பெண்களிடையே இது 19.5% என்ற அதிர்ச்சிகரமான அளவில் உயர்ந்துள்ளது.

20 முதல் 29 வயதுடைய வேலையில்லாத இந்தியர்களில் 67% பேர் பட்டதாரிகள். 15 முதல் 25 வயதுடைய பட்டதாரிகளிடையே வேலையில்லா திண்டாட்டம் கிட்டத்தட்ட 40% ஆக உள்ளது. குடும்பங்கள் தங்களின் சேமிப்பைச் செலவழித்து, மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுப் பட்டம் பெறுகிறார்கள்; ஆனால் இறுதியில் தகுந்த வேலைகள் இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் என்ற வாக்குறுதியின்படி கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 24 கோடி வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. நிரந்தர வேலைவாய்ப்புகளுக்குப் பதிலாகத் தற்காலிக மற்றும் ஒப்பந்த வேலைகளே அதிகமாக்கப்பட்டுள்ளன.

அதிகக் கட்டணக் கல்வி, தகுதியற்ற கற்றல் சூழல், வினாத்தாள் கசிவு, தாமதமான வேலைவாய்ப்புத் தேர்வுகள், திறன்களுக்கு ஏற்ற வேலை இல்லாமை மற்றும் தரமான வேலைகள் காணாமல் போனது ஆகியவை ஒரு முழு தலைமுறையின் எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளியுள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகளால் செய்ய முடியாததைச் செய்து முடிப்பேன் என்று வாக்குறுதி அளித்தீர்கள்! அதை நிச்சயமாகச் செய்து காட்டிவிட்டீர்கள்: அதிகச் செலவு பிடிக்கும் கல்வி முறை, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் நிறைந்த சூழல், இளைஞர்கள் நம்ப முடியாத தேர்வுகள் மற்றும் வேலை தராத பட்டப்படிப்புகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன என்று கார்கே சாடியுள்ளார்.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ‘விகசித் பாரத்@2047-க்கான திறன் மேம்பாட்டை மறுபரிசீலனை செய்தல்’ என்ற அறிக்கையில், 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களில் வேலையில்லாமலும், கல்வியோ பயிற்சியோ பெறாமலும் இருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, சுயதொழிலை ஊக்குவிக்கவும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களைத் தயார்படுத்தவும் மானியத்துடன்கூடிய பயிற்சிகள் அவசியமாக தேவைப்படுகின்றன என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top