நாட்டில் “விண்ணை முட்டும்” பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசை காங். கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது
மேலும், நல்ல காலம் கொண்டு வந்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் மோடி அரசு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்படி வாழ்க்கையை நடத்துவார்கள் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
மோடி ஆட்சியின் கீழ் இன்று பணவீக்கம் விண்ணை முட்டுகிறது. ஒருபுறம் வேலையில்லா திண்டாட்டம்; மறுபுறம் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதற்கிடையில், பணவீக்கம் என்ற வெடிகுண்டு இடைவிடாமல் வெடித்துக்கொண்டே இருக்கிறது.
சர்க்கரைக்கு அடுத்தபடியாக இப்போது வெங்காயமும் சாமானிய மக்களின் கைக்கு எட்டாத தூரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. ஒரே மாதத்தில் வெங்காயத்தின் விலை 76% வரை உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மொத்த விற்பனை விலைகள் இருமடங்காகியுள்ளன, ஆனால் அரசின் இருப்புச் சேமிப்பு காலியாக உள்ளது. பால், எண்ணெய், பழங்கள் மற்றும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் என அனைத்துமே சாதாரண மனிதனால் வாங்க முடியாத நிலைக்கு மாறியுள்ளன.
‘அச்சே தின்’ கொண்டு வந்ததாக உரிமை கோரும் மோடி அரசு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எவ்வாறு தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று கூறினார்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மோடி அரசை காங். குற்றம் சாட்டியிருந்தது. “பொதுமக்கள் இதை நினைவில் கொள்வார்கள், மன்னிக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்திருந்தது.
சோப் முதல் கார்கள் வரை, நறுமணப் பொருட்கள் முதல் கோதுமை மாவு, அரிசி, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் வரை பணவீக்கம் சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது என்று சாடியுள்ள ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசின் தவறான கொள்கைகளால், பொதுமக்கள் நசுக்கப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரின் குடும்ப பட்ஜெட் முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. வருமானம் வரம்பிற்குட்பட்டதாக உள்ளது, ஆனால் சமையலறை செலவுகள் ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. பணவீக்கத்தின் நேரடித் தாக்கம் இப்போது சாமானியனின் தட்டிலும் அன்றாடச் செலவுகளிலும்தான் விழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.




