நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 680 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரூ. 3,284 மதிப்பில் காதொலி கருவி மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் சிறந்த பஞ்சாயத்துகளாக தேர்வு செய்யப்பட்ட 15 ஊராட்சிகளின் செயலாளர்களுக்கு விருது, கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓ சரவனண், நாமக்கல் ஆர்டி சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




