Close
ஆகஸ்ட் 23, 2026 10:16 மணி

ஒடிசா கடற்பகுதியில் பனாமா நாட்டுச் சரக்குக் கப்பல் மூழ்கி விபத்து

ஒடிசாவின் பாராதீப் துறைமுகக் கடற்கரை அருகே 24 பணியாளர்களுடன் சென்ற பனாமா நாட்டின் ‘எம்.வி. ஓஷன் வின்னர்’ என்ற சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 2 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 22 பணியாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

பாராதீப் துறைமுகத்திலிருந்து இரும்புத் தாதுவைச் சுமந்துகொண்டு சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இக்கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர். இதில் 20 பேர் சீன நாட்டவர்கள், 3 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.

கப்பலில் இருந்து அவசர ஆபத்துச் சிக்னல் பெறப்பட்டதையடுத்து இந்திய கடலோரக் காவல் படை மற்றும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை உடனடி மீட்பு நடவடிக்கைகளில் இறங்கின.

சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு மூலம் அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.டி. ஐசோபோஸ்’ என்ற வணிகக் கப்பல் உடனடியாகத் திருப்பி விடப்பட்டது. அந்தக் கப்பல் லைஃப் ராஃப்ட்டில் மிதந்துகொண்டிருந்த 2 பணியாளர்களைப் பத்திரமாக மீட்டுள்ளது.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சோனோவால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள 22 பணியாளர்களைத் தேடும் பணிக்காக இந்திய கடலோரக் காவல் படையின் ஐ.சி.ஜி.எஸ். வரத், ஐ.சி.ஜி.எஸ். அன்மோல் மற்றும் ஐ.சி.ஜி.எஸ். விஜித் ஆகிய கப்பல்களும், இந்திய கடற்படையின் விமானங்களும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியை முடுக்கி விட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top