வெளிநாட்டில் இருந்து சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
மத்திய அரசு, உள்நாட்டின் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு பின், வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் டன் சர்க்கரையை, வரும், அக். 31 வரை, முழு வரி விலக்குடன் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில், பண்டிகை காலம் வருவதை முன்னிட்டும், உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாலும், சர்க்கரை விலை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால், சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வதை அறிந்த விவசாயிகள் மிகவும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
தற்போது, மத்திய அரசு, உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததை காரணம்காட்டி, வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதாக கூறுவதால், இனிவரும் காலங்களில், இது போன்று உணவு தேவைக்காக, வெளிநாட்டில் இருந்து சர்க்கரை மற்றும் இதர உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு, உற்பத்தி செலவில் இருந்து உடனடியாக, 50 சதவீதம் உயர்த்தி லாபகரமான விலையான, குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்.
தற்போது, விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு வெளி சந்தையில் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. அதனால், விவசாயிகள் சாகுபடி செய்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் உணவு பொருட்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றனர்.
வரும் காலங்களில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உணவு பொருட்களை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறும் வகையில், மத்திய அரசு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




