Close
ஆகஸ்ட் 25, 2026 12:33 காலை

வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த ஈரானின் ரியால் நாணயம்!

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிக்க அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரானின் ரியால் நாணயத்தின் மதிப்பு புதிய வரலாற்றுச் சரிவைக் கண்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஈரானியப் பொருளாதாரம் இதனால் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானிய ரியாலின் மதிப்பு 20.2 லட்சமாக சரிந்தது. ஈரானிய மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ விகிதம் ஒரு டாலருக்கு 1.5 மில்லியனாக உள்ளபோதிலும், பெரும்பாலான ஈரானிய மக்கள் மற்றும் வணிகங்கள் அதிகாரப்பூர்வமற்ற சந்தை விகிதத்தையே சார்ந்திருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான மீது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே ஈரான் பொருளாதாரம் இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் எதிர்மறை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரின் விளைவாக ரியாலின் மதிப்பு தொடர்ந்து சாதனை அளவிலான சரிவுகளைச் சந்தித்து வருகிறது.

இருப்பினும், உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், ஈரானை இணங்க வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் இயலவில்லை.

ஜலசந்தியின் மறுபக்கத்தில் அமைந்துள்ள ஓமன் நாட்டுடன் இணைந்து, இந்த ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கூட்டு நிர்வாகம் செய்வதற்கான திட்டத்தின் இறுதி கட்டத்தை ஈரான் எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின்படி பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரான் கட்டுப்பாட்டுப் பாதை வழியாகவும், வெளியேறும் கப்பல்கள் ஓமன் கட்டுப்பாட்டுப் பாதை வழியாகவும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையில், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் மீது அதிருப்தி தெரிவித்துள்ள டிரம்ப், இத்திட்டத்திற்கு ஓமன் முட்டுக்கட்டையாக இருந்தால் அந்நாட்டின் மீது குண்டுவீச நேரிடும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

ஈரானுடனான முட்டுக்கட்டையை உடைக்கும் முயற்சியாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகளை விடக் கடுமையான தடைகள் அறிவிக்கப்படும் என அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட்) உறுதி அளித்துள்ளார். ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீதும் இரண்டாம் கட்டத் தடைகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு எந்தவொரு நாடு ஆதரவு அளித்தாலும், அது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top