குறைந்த வட்டிக்கு, ரூ. 100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி, தொழிலதிபரிடம், ரூ. 2.75 கோடி மோசடி செய்த, மோகனூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் அருண் (40) டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர். தனது நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.
அதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு, புரோக்கர் மூலம், நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, பனமரத்துப்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில்குமார் (47) என்பவரை அணுகி உள்ளார். அவரும், குறைந்த வட்டிக்கு, ரூ. 100 கோடி பெற்றுத்தருவதாக உறுதிகூறி உள்ளார்.
அதை நம்பிய அருண், கடன் தொகைக்கு, ஆவணம் தயார் செய்தல், செயல்பாட்டு கட்டணம் என மொத்தம் ரூ. 2.75 கோடியை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும், கடன் பெற்றுத்தரவில்லை.
இது குறித்து கேட்டபோது, கடன் இப்போ வந்துவிடும், அப்போ வந்துவிடும் எனக்கூறி நாளை கடத்தி உள்ளார். ஒரு கட்டத்தில், கொடுத்த பணத்தையாவது திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த பணத்தையும் தராமல் செந்தில்குமார் இழுத்தடித்து வந்தள்ளார்.
அதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருண், இது குறித்து, கடந்த, 24ம் தேதி, நாமக்கல் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக்கிடம் புகார் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இந்திராணி இது குறித்து வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தார்.
தொடர்ந்து, நடத்திய விசாரணையில், செந்தில்குமார் இது போல் பலரிடம் பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது. அதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




