திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நிகழ்ச்சியை ஆட்சியர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் ஆணையின்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கலைத்திருவிழாபோட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இக்கலைத்திருவிழா போட்டிகள் , மாணவர்களிடையே பசுமையும், பாரம்பரியமும் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது .
தொடர்ச்சியாக இவ்வாண்டும் “இளையோர் திறன்” என்னும் தலைப்பில் தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டு வடிவங்களையும் கலை மரபுகளையும் அறிந்து வெளிப்படுத்தும் வகையில் பல்வகைப் போட்டிகள் பள்ளி அளவிலும்,வட்டார அளவிலும் நடைபெற்றன. மேலும் வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவர்கள், மாவட்ட அளவிலானபோட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் துவக்கி வைத்து பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மாணவர்கள் அனைவரும் தங்களது திறமைகளை மேம்படுத்தி மேன்மேலும் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனையாளர்களாக திகழ வேண்டும். மேலும் மாநில அளவிலானபோட்டிகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பாதையில் செல்ல அனைத்து மாணவ, மாணவிகளை வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தின் 18 ஒன்றியங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. கலைத்திருவிழாபோட்டியின் முதல் நாள் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்போட்டி, செதுக்குச் சிற்பம், பல்வகை நடன போட்டிகள், பல்வகை கருவிகள் இசைத்தல், ஒப்பித்தல், இலக்கிய நாடகங்கள் , சமூக நாடகங்கள், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு முதலான 104 வகையான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலானபோட்டிகளுக்குத் தகுதி பெறுவர். மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவியர்களுக்கு கலையரசி விருதும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர்தமிழ்ச்செல்வன் (பொறுப்பு) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் கார்த்திகேயன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவிதிட்ட அலுவலர் சத்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசன் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.




