லண்டனில் வாங்கும் ஃபேன்டாவின் சுவையும், இந்தியாவில் வாங்கும் ஃபேன்டாவின் சுவையும் ஏன் வேறுபடுகின்றன? அமெரிக்காவில் விற்கப்படும் வாஸலின் அல்லது ஷாம்புகளின் தன்மையும், இந்தியாவில் விற்கப்படும் அதே பிராண்ட் பொருட்களின் தன்மையும் ஒன்றாக இருப்பதில்லையே, ஏன்?
சமீபகாலமாக இந்திய நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி இதுதான். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள், மேலைநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேறுபட்ட செய்முறையினாலும் ஊட்டச்சத்து அளவுகளினாலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரே பிராண்ட்… ஆனால் வேறுபட்ட பொருட்கள்!
சமீபத்தில் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, பிரிட்டனில் விற்பனையாகும் ஃபேன்டா கூல்ட்ரிங்க்ஸில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை விட, இந்தியாவில் விற்கப்படும் ஃபேன்டாவில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய நாடுகளில் உணவுகளில் பயன்படுத்தக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்படும் சில செயற்கை நிறமூட்டிகளும் இந்திய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல், நெஸ்லேயின் கிட்காட் சாக்லேட்டை எடுத்துக்கொண்டால், பிரிட்டனில் விற்பனையாகும் கிட்காட்டில் 66% பால் சாக்லேட் உள்ள நிலையில், இந்தியாவில் விற்கப்படும் தயாரிப்பில் 16.2% மட்டுமே பால் திண்மங்கள் சேர்க்கப்படுகின்றன. சாக்லேட், தானிய உணவுகள் , குழந்தைகளுக்கான பால் பவுடர் மற்றும் தனிநபர் பாதுகாப்பு பொருட்கள் வரை இந்த வேறுபாடு பரவலாகக் காணப்படுகிறது.
வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சர்வதேச உணவு நிறுவனங்கள் இதுபோன்ற இரட்டை ஊட்டச்சத்து தரநிலைகளைக் கையாள்வது குறித்தும் அதன் அறநெறி குறித்தும் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேகேள்விகளை எழுப்பியுள்ளார்.
தயாரிப்பு வேறுபாட்டிற்கு பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள்
வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே தயாரிப்புகள் மாறுபடுவதற்கு வெறும் “தரக் குறைபாடு” மட்டுமே காரணமல்ல; இதற்குப் பின்னால் பல பொருளாதார மற்றும் சமூகக் காரணிகள் உள்ளன:
நுகர்வோரின் வாங்கும் திறன்: மேலைநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் மற்றும் வாங்கும் திறன் குறைவாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, மேலைநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படும் உயர்தர மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு தயாரிப்பை, அதே விலையில் இந்தியச் சந்தையில் விற்க முடியாது. இந்திய நுகர்வோருக்கு மலிவான விலையில் பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன.
மூலப்பொருட்களின் உள்ளூர் உற்பத்தி: செலவுகளைக் குறைக்க பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் மூலப்பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றன. வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கிடைக்கும் தேன், பால் அல்லது தானியங்களின் அடிப்படைத் தன்மையே ஐரோப்பிய நாடுகளிலிருந்து மாறுபடுகிறது.
அரசு விதிகளும் வரிகளும் : பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சர்க்கரை அதிகமுள்ள பானங்களுக்கு சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனால் நிறுவனங்கள் அங்கு சர்க்கரையின் அளவைக் குறைத்து தயாரிப்புகளை மாற்றியமைக்கின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் இல்லாததால் தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே உள்ளது.
இந்தியர்களின் சுவை விருப்பம்: இந்திய நுகர்வோரின் சுவை விருப்பம் மேலைநாட்டினரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. மேலைநாடுகளில் விரும்பி உண்ணப்படும் குறைந்த உப்பு அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட உணவுகள் இந்தியர்களுக்கு சுவையற்றதாகத் தோன்றலாம். இந்தியர்கள் அதிக இனிப்பு மற்றும் குறிப்பிட்ட வாசனை தன்மையை விரும்புவதால், நிறுவனங்கள் அதற்கேற்பவே தயாரிப்புகளை வடிவமைக்கின்றன.
உள்ளூர் பிராண்டுகளுடனான போட்டி: இந்தியாவில் பல தலைமுறைகளாக இயங்கி வரும் உள்ளூர் பிராண்டுகளுடன் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டியிட வேண்டியுள்ளது. இந்தியர்களின் விருப்பங்களையும் விநியோகச் சங்கிலியையும் நன்கு அறிந்த உள்ளூர் பிராண்டுகளுக்கு ஈடுகொடுக்க, பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது செய்முறைகளை மாற்றியமைக்கின்றன.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவுப் பொருட்களுக்கான பாதுகாப்புத் தரங்களை நிர்ணயிக்கிறது. இருப்பினும், மேலைநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஊட்டச்சத்து தரநிலைகளும் அவற்றைக் கண்காணிக்கும் முறைகளும் எந்தளவுக்குக் கடுமையாக உள்ளன என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது.
உணவுப் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு குறித்த வண்ணமயமான எச்சரிக்கை முத்திரைகளை கட்டாயமாக்க முயன்றபோது, உணவு நிறுவனங்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு தயாரிப்பின் செய்முறை மாறுபடுவதால் மட்டுமே அதைச் “சட்டவிரோதமானது” என்றோ அல்லது “முழுக்க முழுக்கப் பாதுகாப்பற்றது” என்றோ கூறிவிட முடியாது. இருப்பினும், சர்வதேச பிராண்டுகள் மேலைநாடுகளில் வழங்கும் அதே ஊட்டச்சத்து தரத்தையும், ஆரோக்கியமான மூலப்பொருட்களையும் இந்திய நுகர்வோருக்கும் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் கோரிக்கையும் தற்போது இந்தியாவில் வலுத்து வருகிறது.




