கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பழங்குடியினர் திட்ட அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல தலைமுறைகளாக விவசாயம் செய்து அனுபவித்து வரும் நிலங்களுக்கு, 2006-ஆம் ஆண்டைய வன உரிமைகள் சட்டத்தின்படி கிராம சபா மற்றும் வன உரிமைகள் குழு அமைக்கப்பட்டு முறையான பட்டா கேட்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவனூர் நாடு சூழவந்திப்பட்டி, கட்டங்காடுப்பட்டி, அரியாலாப்பட்டி மற்றும் நக்கலம்பட்டி ஆகிய கிராமங்களில் அத்துமீறி நுழைந்து, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சில்வர் ஓக் மரக்கன்றுகளைப் பிடுங்கி எறிந்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டியும் வந்த வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், 2006 வன உரிமைகள் சட்டத்தின்படி பட்டா கோரி விண்ணப்பித்துள்ள பழங்குடியின மக்கள் அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மலைவாழ் மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு செங்கொடிகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.




