அரசின் அனுமதியின்றி பெறாமல் திருமணி முத்தாற்றில் கால்வாய் தோண்டும் பணியை, தடுத்து நிறுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட திருமணி முத்தாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகி சேலம் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு ஏரி குளங்களை நிரப்பி, நீர் பாசன வசதியை அளித்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே காவேரி ஆற்றில் திருமணி முத்தாறு கலக்கிறது.
பாசன விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரம் பெறும் ஏரி குளங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், ஆட்டையாம்பட்டி மதியம்பட்டி அருகே உள்ள ஓட்ட அணையிலிருந்து, மல்லசமுத்திரம் மற்றும் வேறு பகுதிகளுக்கு திருமணிமுத்தாற்று தண்ணீரை எடுத்துச் செல்வதற்காக, சில அதிகாரிகளின் துணையுடன் பெரிய அளவில் தண்ணீரை திசை திருப்பி எடுத்துச்செல்வதற்காக, ராட்சத கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை கண்டித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. திருமணி முத்தாற்றின் குறுக்கே கால்வாய் அமைத்து அங்கு தண்ணீரை திருப்பி விட்டால், நாமக்கல் மாவட்டத்தில் பாயும் திருமணிமுத்தாறு முழுமையாக வறண்டு போகும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, திருமணி முத்தாற்றில், அனுமதியில்லால் தவறான முறையில் மதியம்பட்டி மல்லசமுத்திரம் பகுதியில் நடைபெறும் ராட்சத கால்வாய் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி, பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நீர்ப்பாசன முறையை உறுதிப்படுத்த வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாறு நீர் மூலமாக நெடுங்காலமாக பல்லாயிரக்கணக்கில் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறும் ஏரி குளம் மற்றும் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தின் நீர் ஆதாரத்தை உறுதி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். மேலும் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் மீது விசாரணை செய்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் வரும் உபரி நீரை வீணாக கடலில் கலக்காமல் திருமணிமுத்தாற்றில் திருப்பி விட காவேரி திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




