லாரிகள் மற்றம் மோட்டார் வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக சட்டசபையில், விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் மோட்டார் வாகனங்களின் பதிவுச்சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இதனால் வாகன உரி மையாளர்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.
மேலும் புதிய வாகனங்களை பதிவு செய்வது, ஓட்டுநர் உரிமம் பெறுவது உள்ளிட்ட சேவைகளும் வெப்சைட் மூலம் எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு ஏற்படும் காலவிரயமும், பண விரயமும் தவிர்க்கப்படும்.
நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் லாரி உரிமையாளர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், புதிய ஆன்லைன் நடைமுறையில் வெப்சைட் சர்வர் கோளாறு மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, லாரி உரிமையாளர்கள் எந்தவித அபராதமும் இன்றி ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக உரிய கூடுதல் கால அவகாசம் வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




