தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக நாட்டில் உள்ள ஜென்-ஸி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களுக்கு இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்றும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுத்த அரசின் முடிவை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதாவது: ஜென்-ஸி இளைஞர்களின் போராட்டம் ஒரு முக்கியமான கவனத்திற்குரிய விஷயம். அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளும் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை. இந்த இளம் பிள்ளைகள் பல ஆண்டுகளாக இரவு பகலாகப் படித்துத் தேர்வுக்குத் தயாராகிறார்கள். ஆனால், திடீரென்று ஏதேனும் ஒரு இடத்தில் வினாத்தாள் கசிந்துவிட்டதாகக் கூறித் தேர்வை ரத்து செய்துவிடுகிறார்கள்.
நாங்கள் மீண்டும் தேர்வு நடத்துகிறோம் என்று மிகவும் சுலபமாக அரசு தரப்பில் கூறிவிடுகிறார்கள். ஆனால், மீண்டும் தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இத்தகைய மன உளைச்சலால்தான் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயரச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குரேஷி, இந்தியக் கல்வி மற்றும் தேர்வு முறைகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே மாணவர்களின் முதன்மையான கோரிக்கையாக இருந்தது. அது மிகவும் சரியான கோரிக்கை. இதுவரை அரசு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதால், மாணவர்கள் திருப்தியடைந்துள்ளனர். அவர்கள் என்ன பெற நினைத்தார்களோ அதை அடைந்துள்ளனர், இது ஒரு நல்ல விஷயம் எனக் கூறினார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ மற்றும் ‘அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் ‘ஜென்-ஸி’ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஜூலை 20 அன்று பார்லியை நோக்கி மாணவர்கள் பேரணியும் நடத்தினர்.
இந்தப் போராட்டங்களின் தீவிரத்தைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பிரகலாத் ஜோஷி கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களிலும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

