17 வயது சிறுமியை திருமணம் செய்த தச்சு தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டி வரவனையை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (23). இவர் தச்சு தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ராசிபுரம் காவல்துறையினர் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக ஜெயகிருஷ்ணனின் தந்தை தங்கவேல் (55), தாய் பழனியம்மாள் (50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஜெயகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் ஜெயகிருஷ்ணனின் தந்தை தங்கவேல், தாய் பழனியம்மாள் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது




