நாமக்கல்லில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 1,079 வழக்குகளுக்கு ரூ. 17 கோடியே, 48 லட்சத்து, 57 ஆயிரத்து 3 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மாவட்டத்தில் உள்ள மற்ற நீதிமன்றங்களிலும், தேசிய அளவிலான லோக் அதாலத் நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை நீதிபதி குருமூர்த்தி முன்னிலை வகித்தார். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற முதலாவது அமர்வில் நீதிபதிகள் பிரபா சந்திரன், சச்சிதானந்தம், செகனாஸ்பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.
2வது அமர்வில், நீதிபதிகள் எழில் வேலவன், சண்முகபிரியா மற்றும் தங்கமணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திருச்செங்கோடு நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் ரூபனா மற்றும் முத்து ஆகியோரும், 2வது அமர்வில் நீதிபதிகள் ரங்கராஜ் மற்றும் ஷண்மதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ராசிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதிகள் திலீப் மற்றும் மோகனபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரமத்தி நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் நீதிபதி நளினகுமார் மற்றும் பட்டியல் வக்கீல் செல்வமணி ஆகியோரும், 2வது அமர்வில் நீதிபதிகள் சுஹேஷ் மற்றும் கலைசெல்வி ஆகியோரும்,
குமாரபாளையம் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நவீனா மற்றும் பத்மபிரியா ஆகியோரும், சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிதுலா மற்றும் ராஜாகுமரன் ஆகியோரும் அடங்கிய அமர்வுகள் வழக்குகளை விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி மற்றும் சார்பு நீதிபதி வேலுமயில் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
லோக் அதாலத்தில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், செக் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
1,711 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டு 1,079 வழக்குகளுக்கு ரூ.17,48,57,003 மதிப்பில் தீர்வு காணபட்டது.




