Close
ஏப்ரல் 24, 2026 10:39 காலை

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் சார்பில் நிதியுதவி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு காசோலையை வழங்கினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து அரசு துறையிலும் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது மேலும் அந்தந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்தந்த சங்கங்கள் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது,  சங்க உறுப்பினர்கள்  யாரேனும் இறந்துவிட்டால் அந்த சங்கங்கள் மூலமாக தமிழக அரசிடம் நிதி பெறுவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

ஆனால் சங்கங்கள் இல்லாமல் செயல்படும் ஒரே துறை  காவல் துறை மட்டும்தான்.  காவலர்கள் பணியின்போது  மரணமடைந்துவிட்டால்,  அந்த குடும்பத்துக்கு தமிழக அரசு மூலமாக  பெறப்படும் நிதி மற்றும் கருணை அடிப்படையில் பணியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் நிதியோ அல்லது வேலை வாய்ப்போ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  சற்று தாமதமாகவே கிடைக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. உடனடி உதவி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 1997 -ஆம் ஆண்டு பணிபுரிந்த காவலர்கள் செகண்ட் பேட்ச் என்ற ஒரு வாட்ஸ்அப் குழுவினை தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் காவலர்களை ஒன்று சேர்த்து வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பணியின்  போது மரணமடையும்  காவலர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி வருகின்றனர்.  இந்த அமைப்பின் மூலம்  இதுவரை உயிரிழந்த  23 காவலர்களுக்கு 2 கோடி 39 லட்சத்தி 9 ஆயிரத்து 94 ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளனர்.

தற்போது 24 வது நபராக தமிழ்நாடு காவல்துறையில் 1997ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த தலைமை காவலர் கண்ணன்,  அயல் பணியாக கோயமுத்தூர் பணிபுரிந்து வந்த போது கடந்த 20.05.2021 வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தை களை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு  வந்த நிலையில், அவர்களுக்கு உதவி செய்யும் விதத்தில்   1997 செகண்ட் பேட்ச் காவல் பயிற்சி நண்பர்கள் அனைவரும்  ரூ.13 லட்சத்தி 37 ஆயிரத்து 500  தொகையை திரட்டினர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை அரங்கில்   (27.2.2022) நடைபெற்ற நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு அவருடைய குடும்பத்தாரிடம் அந்தத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர்  மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபன் பேச முற்பட்டபோது துக்கம் தாளாமல்  கண்கள் கலங்கினார். இதனை பார்த்த மற்ற காவலர்களும்  கண் கலங்கினர்.

இதில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், கரூர், திருச்சி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரியும் காவலர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top