Close
செப்டம்பர் 20, 2024 6:27 காலை

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

ஏஐடியுசி

தஞ்சையில் நடந்த ஏஐடியுசி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசை வலியுறுத்தி மார்ச் 22-இல்  தஞ்சையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுமென ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம்    தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை பங்கேற்று நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநிலத்துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஓய்வூதியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் குறித்து  பேசினார்.

ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம், நுகர்பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கூட்டத்தில் பொறியாளர் எஸ்.முருகையன், பரிசோதகர் ஓய்வு பி.குணசேகரன், ஏ.இருதயராஜ், டி.தங்கராசு, ஆர். ஞானசேகரன், என்.சிவக்குமார், ரெஜினால்டுரவீந்திரன், ஆர்.சாம்பசிவம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் பழைய, புதிய அகவிலைப்படி உயர்வு என்பது இன்று வரை அறிவிக்கப்படவில்லை. அரசு ஓய்வூதியர்கள், அலுவலர்கள் அகவிலைப்படி உயர்வு பெற்று வரும் நிலையில், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு இன்னும் அறிவிக்கப் படாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

உடனடியாக பழைய, புதிய அகவிலைப்படி உயர்வு அறிவித்து, ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர் களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் குடும்பநல நிதி திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆண்டு தோறும் வாரிசுபணி வழங்க வேண்டும்.  2016 செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு தாமதமின்றி வாரிசு பணி ஆணை வழங்க வேண்டும். மூன்று வருடத்துக்கு ஒருமுறை பேசப்படும் ஊதிய உயர்வு ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.  பணிக்காலத்தில் தொழிலாளர்களிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சேமநலநிதி தொகை 2016 ஜூன்மாதம் முதல் நிலுவையில் உள்ளதை  வழங்க வேண்டும்.

கடந்த 2020 மே மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது இறந்த தொழிலாளர் வாரிசுகள், மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்றவர் களுக்கான பணிக்கொடை, பிஎப், விடுப்பு உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அரசு  நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 22 -ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தஞ்சை கோட்ட அலுவலகம் முன்பு நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top