புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், புதுக்கோட்டை, தேனிப்பட்டியில் புதிய கிளைகளையும், அரிமளம், விராலிமலையில் புதிய ஏடிஎம் மையங்களையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: கூட்டுறவுத்துறை யின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி கூட்டுறவே நாட்டுயர்வு எனும் அடிப்படையில் மக்களுக்காக இயங்கிவரும், கூட்டுறவு வங்கிகள் மூலமாக பல்வேறு அரசு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கூட்டுறவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 27- வது புதிய கிளை புதுக்கோட்டை டிவிஎஸ் நகரிலும், 28 -வது புதிய கிளை அரிமளம் ஒன்றியம், தேனிப்பட்டியிலும் மற்றும் அரிமளம், விராலிமலையில் தலா ஒரு மத்திய கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 19.11.1920 ஆம் தேதி 8 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 12 தனி நபர் சேர்ந்து ரூ.11,000 மூலதனத்துடன் வங்கியில் சேவை துவங்கப்பட்டது. 19.11.2020 -ல் வங்கி நூற்றாண்டு விழா கண்டது. தற்போது 30.04.2022 -ல் வைப்பு மற்றும் இதர சேமிப்புகள் மூலம் ரூ.832.50 கோடி வைப்புத் தொகை பெற்றும், ரூ.945.00 கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சாராத கடன்கள் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் வழங்கியுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 26 கிளைகள் மற்றும் 245 இணைப்பு சங்கங்களுடன் தற்போது புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
வங்கியால் வட்டியில்லாத பயிர்க்கடன்கள் விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன்கள், சுயஉதவிக்குழுக் கடன்கள், டாம்கோ, டாப்செட்கோ, மாற்றுத்திறனாளிகள் கடன், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன்கள், சிறு வணிகக்கடன்கள், பணிபுரியும் மகளிர் கடன், பணியாளர்கள் சம்பளக்கடன், வீட்டு வசதிக்கடன் மற்றும் வீட்டு அடமானக்கடன் போன்ற அனைத்து கடன்களும் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு 48,088 விவசாயிகளுக்கு ரூ.225.00 கோடி வட்டியில்லா பயிர்க்கடனும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 7,741 நபர்களுக்கு ரூ.19.33 கோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 110-விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பிற்கான நடைமுறை மூலதனக்கடன்கள் 5,589 நபர்களுக்கு ரூ.12.13 கோடியும்.
மாற்றுத்திறனாளிகள் 246 நபர்களுக்கு ரூ.1.15 கோடியும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 228 நபர்களுக்கு ரூ.47 இலட்சமும், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதனைச் சார்ந்த 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் தொடர்ந்து மிக அதிக அளவில் கடன்கள் வழங்கப்படும். எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேவைகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.
அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை டிவிஎஸ் நகர், தேனிப்பட்டி, அரிமளம் மற்றும் விராலிமலை வங்கி கிளை களின் சார்பில் 99 பயனாளிகளுக்கு ரூ.4,79,99,000 மதிப்பிலான வங்கி கடன் உதவிகளையும், புதுக்கோட்டை வுஏளு நகர், தேனிப்பட்டி மற்றும் விராலிமலை வங்கி கிளைகளின் சார்பில் 6 பயனாளிகளின் ரூ.12,00,000 க்கான வங்கி வைப்பு தொகைக்கான இரசீதுகளையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப் பாண்டியன், மத்திய கூட்டுறவு மேலாண் இயக்குநர் தனலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, குழந்தைசாமி.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினர் சத்தியசீலன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.