Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

மனநலம் பாதிக்கப்பட்டு மன நல சிகிச்சை மூலம் மீட்கப்பட்டவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மன நல மீள் மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்ணை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. உடன் மன நல மருத்துவர் ரெ. தெய்வநாயகம்

மனநலம் பாதிக்கப்பட்டவர் மன நல சிகிச்சை மூலம் மீட்கப்பட்டவர்   மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில், சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  சங்கரி என்பவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில்  (15.06.2022) அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு 65 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் இருந்து மீட்கபட்டு புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மறதி நோய், குணநல மாறுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, பார்வை குறைபாடு ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த மனநல மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பயனாளி மீண்டும் பார்வை பெற்றார்.

இந்நிலையில்  சங்கரி தனது குடும்பத்தினர் மற்றும் சொந்த ஊர் குறித்த தகவல்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினரின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் கடலூர் மாவட்டம், புவனகிரியில் வசிப்பது கண்டறியப்பட்டது.

சிகிச்சையின் பலனாக அவர் முழுமையாக குணமடைந்த தைத் தொடர்ந்து  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, சங்கரியை அவரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அனுப்பி வைத்தார்.

கடந்த 6 மாதங்களாக சங்கரியை தேடி வந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு தங்களுடன் மீண்டும் சேர்த்து வைத்ததற்கு, அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top