Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனித்திருவிழா கொடியேற்றம்

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலயம் உள்ளது.  இந்த  ஆலயத்தில் ஆனித்திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு சாந்தநாதசுவாமி தன்னைச் சார்ந்தவர்களைக் காக்கும் கடவுளாக மக்கள் வழிபடுகின்றனர்.

முற்காலத்தில் குலோத்துங்க சோழீச்சரம் என்றழைக்கப் பட்டஇத்திருக்கோயில் பின்னர் சாந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்று அழைக்கப்பட்டு.தற்போது சாந்தநாதசுவாமி திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. தன்னைச் சார்ந்தவர் களைக் காக்கும் கடவுளாகவே மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

நகரின் மத்தியில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில் கிபி.1071-1123 -வரை அரசாண்ட முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது. சாந்தநாதசுவாமி சந்நிதி அதிஷ்டானத்தில் உள்ள கல்வெட்டு இக்கோயிலை குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடுகிறது.

புதுக்கோட்டை நகரில் கிழக்கு ராஜவீதியிலிருந்து கோயிலுக்குச்செல்லும்  நுழைவு வாயில் அனைவரையும் வரவேற்கிறது. கோயில் வெளிமண்டபம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம் மண்டபம்,பலிபீடம், நந்திகேசரும் அமையப்பெற்றுள்ளன.

அருள்மிகு சாந்தநாதர் குடிகொண்டிருக்கும் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் கிழக்கு நோக்கி அமையப் பெற்றும், நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கிதன்னை நாடி வரும்பக்தர்களுக்குத் தாயைப் போல் அருள்பாலிக்கும், கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளிக்கும் அருள்மிகு வேதநாயகி அம்பாளின் கர்ப்பக கிரகமும், அர்த்த மண்டபமும் தெற்குநோக்கி அமையப்பெற்றும் இரண்டு சந்நிதிகளுக்கும் முன்பாக மகா மண்டபமும்,தனித் தனியே நந்திகேசருடன் அமையப் பெற்றுள்ளது.

மேலும்,சுவாமி,அம்பாள் விமானங்கள் மிகஅற்புதமான கலைஅம்சங்களுடன் சிற்பங்களுடனும், ஆகம விதிகளின்படி முறையே மூன்று தளம், இருதளம் ஆகியவற்றுடன் அமையப்பெற்று பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளன

இத்தகைய சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில் ஆனிமாதத்திருவிழா 11 நாள்கள் விமரிசையாக நடைபெறும். நிதழாண்டுக்கான ஆனிமாதத்திருவிழா 2.7.2022 சனிக்கிழமை தொடங்கியது. இதனையொட்டி ஆலயகத்தில் உள்ள கொடிமரத்தில்  சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொடியேற்றத்தையொட்டி கோவிலில் சாந்தசுவாமி மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர். வருகிற 5-ஆம் தேதி ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. திருவிழா வருகிற 12- ஆம்  தேதி வரை நடக்கிறது.

இதில்  அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கோயில் மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top