Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது மக்கள் வயிற்றில் அடிக்கும் செயல்: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

மதிமுக

மதிமுக பொதுச்செயலர் வைகோ

சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது மக்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலர்  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதைப் போல, சமையல் எரிவாயு உருளையின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு 14.2 கிலோ உருளையின் விலை ரூ.710 ஆக இருந்தது. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மே மாதம் ரூ. 1018.50 -ஆக இருந்து வந்தது.

இந்நிலையில்,  ஜூலை 6 -ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.1068.50 ஆக ஒன்றிய பா.ஜ.க. அரசு உயர்த்தி இருக்கிறது. 19 மாதங்களில் சமையல் எரிவாயு உருளை ரூ.358.50. அதாவது 50.44  விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.

இந்த விலை உயர்வுக்கு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவும் காரணம் என்று ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

2014 மே மாதம், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற போது, சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.410.50 ஆக இருந்தது. பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 658 ரூபாய் அதிகரித்து, தற்போது சமையல் எரிவாயு விலை ரூ.1068.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலர். தற்போது ஜூலை 6, 2022 ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 113.50 டாலரிலிருந்து 102 டாலராக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

2014 ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குத்தான் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2022 ஜூலை மாதமும் இருக்கிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு விலையை உருளை ஒன்றுக்கு ரூ.410 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆனால் தொடர்ச்சியாக மக்களை வாட்டி, வஞ்சித்து வரும் மோடி அரசு, சமையல் எரிவாயு விலையை ரூ.1068.50 ஆக அதிகரித்து, மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டே வருவது கண்டனத்திற்குரியது.

சமையல் எரிவாயு மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறோம் என்று மோசடியான திட்டத்தைச் செயல்படுத்திய ஒன்றிய அரசு, மானியத்தை ரூ. 300 லிருந்து தற்போது வெறும் ரூ.24 ஆக குறைந்துவிட்டது.

தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ந்து உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடிப்பதை பா.ஜ.க. அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பா.ஜ.க. தலைவர், சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடுவாரா?

சமையல் எரிவாயு உருளையின் மானியத்தை அதிகரிக்க வேண்டும்; விலை உயர்வை இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top