Close
செப்டம்பர் 20, 2024 6:42 காலை

குரூப் 1 தேர்வில் வென்று போலீஸ் டிஎஸ்பி பணிக்கு தேர்வான புதுகை மாணவி…

புதுக்கோட்டை

தமிழ் வழியில் படித்து குரூப் 1 தேர்வில் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள புதுக்கோட்டை மாணவி பவானியா

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி வீரம்மாள். இவர்கள், உள்ளூரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரேவதி, வனிதா, பவானியா, திலகா ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.
இவர்களில் ரேவதி, வனிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. பிளஸ் 2 வரை உள்ளூர் அரசுப் பள்ளிகளில் படித்த பவானியா, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை தமிழ் வழியில் படித்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த இவர், தற்போது டிஎன்பிஸ்சி நடத்திய  குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். குக்கிராமத்தில் இருந்து முதல் முயற்சியிலேயே அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள கிராம மக்கள் பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.

புதுக்கோட்டைஇது குறித்து பவானியா கூறியதாவது. பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படித்து வந்தேன். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி சார்பில்  இருந்து அழைத்து செல்லப்பட்டேன்.

அங்கு, ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார் பேசியதும், அதன்பிறகு, கல்லூரி விழாவுக்கு வந்த சார் ஆட்சியராக பணிபுரிந்த சரயு பேசியதும் எனக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக இருந்தது. அந்த நிகழ்ச்சிதான் எனது கனவு நனவாகும் என்ற நம்பிக்கையை அளித்தது.
3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் கிடைத்த புத்தகங்களைக் கொண்டு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன். குரூப் 1 தேர்வுக்கு 2021-ல் நடைபெற்ற முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அதே ஆண்டில் சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் 2021-ல் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தேன்.
நிகழாண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்வழிக் கல்விக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி கிடைத்துள்ளது.
ஏழை குடும்பத்தில் பிறந்து, தன்னம்பிக்கையோடு படித்து, 66 பேரில் ஒருவராக எனக்கு இந்த பணி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனினும், குடிமைப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதே லட்சியம். குரூப் 1 எழுத்துத் தேர்வு, நேர்காணலுக்கு உரிய பயிற்சியும், அதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜன் செய்ததே எனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top