Close
ஏப்ரல் 24, 2026 10:39 காலை

அண்ணாமலையார் மலையில் மண்சரிவு: 6 உடல்கள் மீட்பு

திருவண்ணாமலை மலை மீது ஐஐடி குழுவினர் ஆய்வு நடத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவால் பாறைகள் உருண்டு வஉசி நகர் பகுதியில் 3 வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளுக்குள் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களைத் மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மண் சரிவில் சிக்கியவர்களை விரைந்து மீட்க சென்னை இந்திய தொழில் நுட்ப போரசிரியர்களும், பாறையை உடைத்து எடுக்கும் வல்லுநர்கள் குழு ஏற்காட்டிலிருந்தும் வரவைக்கப்பட்டுள்ளது.

மீட்டு பணியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மண் சரிவில் சிக்கிய ஏழு பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள ஒருவரின் உடல் ஆழத்தில் இருப்பதால் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாறை சரிந்த இடத்தில் ஐந்து குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்டு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் போதிய இயந்திரங்கள் உதவியுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை அரசு மற்றும் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர்.

மழை குறுக்கிட்ட போதிலும் 12 மணி நேரத்தீற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top