அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மற்றும் எச்-1பி விசா திட்டம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.
எச்-1பி விசாக்களுக்கு எதிராக அமெரிக்காவில் சில கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சுந்தர் பிச்சை இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையை வடிவமைப்பதில் புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றியுள்ள பங்கை சுந்தர் பிச்சை “அபரிமிதமானது” என்று புகழ்ந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றை நீங்கள் பார்த்தால், இத்துறையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு என்பது அபரிமிதமாகவே இருந்துள்ளது. தற்போதைய எச்-1பி விசா திட்டத்தில் சில “குறைபாடுகள்” இருந்தாலும் , இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பணியாற்றி வருகிறது. மேலும் “திறமையான நபர்களை” நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான வழிகள் இன்னும் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் படித்துவிட்டு, உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை, முதலில் ஒரு சர்வதேச மாணவராக நுழைந்து, பின்னர் எச்-1பி விசா மூலம் பணிபுரியும் தகுதியைப் பெற்று, படிப்படியாக உயர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைவரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த நிலைப்பாடு நீண்ட காலமாகவே புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
2020-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான பணி விசாக்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டபோது அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “குடியேற்றம் அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு அபரிமிதமாகப் பங்களித்துள்ளது. இது கூகுள் இன்று இருக்கும் நிறுவனமாகவும், அமெரிக்காவை தொழில்நுட்பத்தில் உலகத் தலைவராகவும் ஆக்கியுள்ளது. இந்த முடிவால் ஏமாற்றம் அடைகிறோம் – நாங்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்களுடன் துணை நிற்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
விசா நீக்க முயற்சி மற்றும் இந்தியர்கள் மீதான தாக்கம்
சமீபகாலமாக, எச்-1பி விசா திட்டம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. சில முக்கிய அரசியல் தலைவர்கள், இந்த விசா முறையை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கோரி சட்டம் கொண்டுவரத் திட்டமிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த விசா திட்டம் நீக்கப்பட்டாலோ அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டாலோ, அது மிகப்பெரிய அளவில் இந்தியப் பணியாளர்களைப் பாதிக்கும். ஏனெனில், சமீபத்திய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து எச்-1பி விண்ணப்பங்களில் 70% க்கும் அதிகமானவை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் திறமையான தொழில் வல்லுநர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.




