Close
ஆகஸ்ட் 16, 2026 12:15 மணி

மம்தாவின் நெருங்கிய உதவியாளர் ஆசிஷ் பானர்ஜி, திரிணாமூல் அலுவலகத்தில் சடலமாக மீட்பு

மேற்கு வங்க சட்டமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகரான ஆசிஷ் பானர்ஜி, பீர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாட் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் ஒன்றும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிஷ் பானர்ஜி அரசியலில் நுழைந்தது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, தனது குடும்பத்தினரையும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தக் கடிதத்தில், ஊழலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் மறுத்ததோடு, கட்சியின் “தவறை” தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை ஒருபோதும் எதிர்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆசிஷ் பானர்ஜியின் அரசியல் பயணம்

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் ஆசிஷ் பானர்ஜி. பல ஆண்டுகளுக்கு முன்பு மம்தா பானர்ஜி முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆசிஷ் பானர்ஜி மேற்கு வங்க கல்வி மற்றும் விவசாய அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் தீவிர அரசியலில் இருந்து சற்றே விலகி இருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட காலம் திரிணாமூல் காங்கிரஸின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த ஆசிஷ் பானர்ஜியின் மறைவுச் செய்தி பரவியதும், ராம்பூர்ஹாட்டில் உள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தின் முன் திரளான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டனர்.

15 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு திரிணாமூல் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வங்காள அரசியலில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களுக்கு மத்தியில் இன்றைய நிகழ்வு நடைபெற்றுள்ளது. பல முன்னாள் திரிணாமூல் சட்டமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் ஊழல் தொடர்பான விசாரணைகளையும் கைது நடவடிக்கைகளையும் எதிர்கொள்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top