வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி, நாமக்கல் மாயம் பிள்ளையார் கோயிலில் நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் சார்பில் கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.
நாமக்கல் மாநகர அதிமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் நாமக்கல், சேலம் ரோட்டில் உள்ள மாயம் பிள்ளையார் கோயிலில் உள்ள கருப்பனார் கோயிலில் கிடா வெட்டி விருந்து படைக்கப்பட்டது.
இதில் நாமக்கல் அதன் சுற்றுவட்டாரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விருத்தில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
முன்னதாக மாயம் பிள்ளையார் கோயிலில் பூஜைகள் நடைபெற்றது. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கூறுகையில், வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோயிலில் பூஜை செய்து விருந்து வைக்கப்பட்டது என்றார்.
கடந்த 2011-2016, 2016-2021 என இருமுறை பாஸ்கர் எம்எல்ஏவாக இருந்தார். தொடர்ந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலையில் பாஸ்கர் களம் இறங்கியுள்ளார். இதன் முன்னோட்டமாக கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார் என அதிமுகவினர் தெரிவித்தனர்.




