திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி மதுரை அவனியாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் திருப்பரங்குன்றம் வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருமாவளவன் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக எச் ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், விசிக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் மற்றும் மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




